written by:
Dr. M.H.M. Nazeem, Senior Lecturer, University of Colombo, Unani Section
BUMS (Hons) MPhil Unani (Colombo), EMA (Ceylon Medical College Council)



தாய்ப்பாலூட்டுவது என்பது குட்டியீன்று பாலூட்டும் உயிர் வாழும் இனங்களின் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். ஆனால் மனிதனைத் தவிர ஏனைய சகல உயிரினங்களும் இன்று வரைக்கும் இப்பொறுப்பைச் செய்து வந்து கொண்டிருக்கின்றன. ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் எமது முன்னோர்கள் கூட இந்தப் பாரிய பொறுப்பைச் சரிவர நிறைவேற்றினார்கள். எமது முன்னைய சந்ததியினர் ஒரு குழந்தையை ஈன்ற தாய் ஏதாவது ஒரு காரணத்தினால் இறந்தால் பசும்பாலைக் கொடுக்காமல் செவிலித் தாய்மூலம் பாலூட்டியதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் மனிதனின் அறிவும் தொழில் நுட்பமும் கூடி செயற்கைப் பால்வகைகள் அறிமுகப்படுத்தப் பட்டதன் பின்பு தாய் உயிருடன் இருந்தும் கூட தாய்ப்பால் கொடுக்காமல் செயற்கைப் பாலைக் கொடுப்பதென்பது ஒரு கவலைக்கிடமான விடயமாகும். தாய்ப்பால் கொடுப்பதால் தனது ஆழகும் கவர்ச்சியும் கெட்டு விடும் என்ற ஒரு தப்பபிப்பிராயம் அனேகமான தாய்மார்களின் எண்ணமாக இருந்தாலும் கூட அதை வெளியே கூற முடியாமல் குழந்தை பால் குடிப்பதில்லை அல்லது பால் போதுமானளவு சுரப்பதில்லை என்ற போலிச்சாட்டுக்களையே முன் வைக்கின்றார்கள்.

அத்துடன் குழந்தைகளுக்கு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகும் வரை தாய்ப் பாலுட்டும் படி புனித குர்ஆனில் குறிப்பிட்டிருந்தாலும் கூட இது விடயமாகப் பரவலான விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளை மௌலவிமார்களோ அல்லது முஸ்லீம் வைத்தியர்களோ மேற்கொள்ளாமல் இருப்பது ஒரு வியக்கத்தக்க விடயமாகும். தாய்ப்பால் சமது எதிர்கால செல்வங்ககளின் திடகாத்திரமான உடல், உள ரீதியான விருத்திக்கு முக்கியமானதாகும். அத்துடன் மனித நேயம் என்ற மானிட சமுதாயத்திற்கே உரித்தான பெளதிக குணம் தாய்ப்பாலில மாத்திரம்தான் இருக்கின்றதே தவிர பசுப்பாலிலோ அல்லது எனைய பால்வகைகளிலோ இல்லை என்பதை ஒவ்வொரு தாயும் உணர்ந்தால் எந்தவொரு தாயும் தாய்ப்பால் கொடுப்பதிலிருந்து பின் வாங்க மாட்டார் என நினைக்கின்றேன் மேலும் மனிதனுக்கு மாத்திரம் இருக்கக்கூடிய பகுத்தறிவின் விருத்திக்கும் தாய்ப்பால் முக்கியமாகும்.

தாய்ப்பால் என்பது இலகுவாக ஊட்டக்கூடியதாகவும் பண செலவு இல்லாததாகவும் ஒரு குழந்தையின் விருத்திக்குத் தேவையான சகல சத்துக்களைக் கொண்டதாகவும் அலர்ஜியை உனைடாக்காததாகவும் நோய்த்தடுப்பு நிவாரணியாகவும் தொழிற்படுகின்றது.

அதேபோன்று தாய்ப்பாலூட்டல் மூலம் தாய்மார்களுக்கும் பல நன் மைகள் உண்டு அதாவது பிரசவத்தின் பின்பு கருப்பையின் அளவு கூடிய சீக்கிரம் சாதாரண நிலைக்குத் திரும்புவதோடு மார்பு மற்றும் கருப்பைப்புற்று நோய்கள் ஏற்படுவதையும் தாய்ப்பா ஊட்டல் தடுக்கின்றது.

இதற்கு மாறாக செயற்கைப்பால்களைக் கொடுக்கும் போது அலர்ஜி காரணமாக ஏற்படக் கூடிய தொடர்ச்சியான சுவாச நோய்கள் அடிக்கடி வயிற்றோட்டம் நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதன் மூலம் ஏற்படக்கூடிய நோய்கள் ஏற்படலாம். மேலும் ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் பிரசவம் நடந்து ஒரு சில நாட்களுக்கு பால் சுரக்காமல் ஒருவகை மஞ்சள் நிறத்திரவமே சுரக்கும். ஒரு சில தாய்மார்கள் இந்த மஞ்சள் நிறத்திரவத்தை அசுத்தப்பால் என எண்ணிக் கொடுப்பதில்லை. இது முற்றிலும் ஒரு பிழையான கருத்தாகும். இந்தத் திரவத்தில் தான் அதிகளவு விட்டமின் A, E, K மற்றும் நோய்க்கிருமிகளை அழிக்கக்கூடிய Antibody எனப்படும் பொருள் போன்றவைகள் இருப்பதனால் இதைக் கட்டாயம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். ஒரு குழந்தையின் பூரண விருத்திக்கு நான்கு மாதங்கள் வரைக்கும் தாய்ப்பால் மாத்திரம் போதுமானது.

ஒரு சில தாய்மார்கள் குழந்தைகள் தாய்ப்பாலை உறிஞ்சுவதில்லை எனக் கூறி தாய்ப்பாலை நிறுத்தி விடுகிறார்கள். தாய்ப்பாலைக் கொடுக்கும் போது பிள்ளையின் மூக்கு மார்பகத்தினால் அடைப்படும்போது குழந்தைகள் பாலை உறிஞ்சாமல் நிறுத்திவிடும், இதற்கு மாறாக பால் குடிக்கும் போது தொடர்ந்தும் மூச்சித் திணறல் ஏற்பட்டால் வைத்தியர் ஒருவரினது ஆலோசனையைப் பெற வேண்டும். மேலும் சில தாய்மார்கள் தனக்கு ஏதும் பாரதூரமில்லாத நோய்கள் ஏற்பட்டால் பால் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்குத் தீங்கு ஏற்படலாம் என எண்ணி தாய்ப்பாலை நிறுத்தி விடுகிறார்கள். பொதுவாக எய்ட்ஸ் நோய், புற்று நோய் போன்ற நிலைகளிலேயே பாலூட்டுவது சிபார்சு செய்யப்படுவதில்லை. மேலும் தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்கு , நான்கு மாதங்கள் வரை பிரத்தியேகமான , வைட்டமின்களை கொடுக்க வேண்டியதில்லை. மாறாகத் தாயக்கு இருப்புச்சத்து கால்சியம் உட்பட விட்டமின்களைக் கொடுக்கலாம்.

தாய்ப்பாலின் மற்றுமொரு அதிசயம் என்னவென்றால், குளிர்காலங்ளில் குழந்தைகளுக்கு பால் சூடாகவும் சூடான காலங்களில் பால் குளிராகவும் சென்றடைகின்றன. இது அல்லாவின் அற்புதங்களில் ஒன்றாகும். நான்கு மாதங்கள் பூர்த்தியானவுடன் நீங்கள் வைத்தியர்களின் ஆலோசனைப் படி தேவையான உணவுகளைப் படி படியாக குடுக்க ஆரம்பிக்கலாம்.

தாய்ப்பால் கொடுக்கும்படி கூருவது மனிதனின் கட்டளை அல்ல எனவும் இது குரான் மூலம் இறைவன் மானிட சமுதாயத்துக்கே இட்ட கட்டளை. இறுதியாக வாசகர்களுக்கு விஷேடமாக இஸ்லாமிய பிரசங்கங்களை நடாத்தும் மெளலவிமார்களும் மற்றும் வைத்தியர்களும் ஒரு செய்தியாக அது இறைவனின் தாய்ப்பாலூட்டல் பற்றிய கட்டளையை ஒரு முக்கிய கருப்பொருளாகக் கருதி எமது சமூகத்தில் தாய்ப்பாலூட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்தும்படி வேண்டுகிறேன்.